This Article is From Feb 12, 2019

புதிய கேபிள் கட்டண முறையை அமல்படுத்த அவகாசம் நீட்டிப்பு! - டிராய் அறிவிப்பு!

கேபிள் டிவிக்கான புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

புதிய கேபிள் கட்டண முறையை அமல்படுத்த அவகாசம் நீட்டிப்பு!  - டிராய் அறிவிப்பு!

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணமாக 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் பிப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கேபிள் ஆபரேட்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் செயல்படுகிறது என்று கூறி கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம், மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது. அதுவரை பழைய முறையே தொடரும் என்றும் ட்ராய் கூறியுள்ளது. சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.

.