This Article is From Nov 20, 2019

INX Case: ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - தொடரும் நெருக்கடி!

INX Media money-laundering case - கடந்த நவம்பர் 15 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

INX Case: ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கு - தொடரும் நெருக்கடி!

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான, சொலிச்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நவம்பர் 25 ஆம் தேதிக்குள் நோட்டீஸுக்கு பதில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் (P Chidambaram), வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறையிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், ப.சிதம்பரத்துக்குத் தொடர்ந்து ஜாமீன் கிடைக்காத நிலையே இருக்கிறது. 

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராகத்தான் அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அது குறித்தான விசாரணையின் போதுதான், அமலாக்கத் துறைக்கு 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான, சொலிச்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நவம்பர் 25 ஆம் தேதிக்குள் நோட்டீஸுக்கு பதில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நவம்பர் 26 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம், ‘மனுதாரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் மிகவும் பெரியவை. அவர் குற்றங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தெரிகிறது,' என்று கருத்து கூறியது. 

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சிதம்பரம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சிபிஐ அமைப்பு தொடர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யபட்டார். சிபிஐ-யின் வழக்கில் அவருக்கு கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிணை கொடுக்கப்பட்டது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. 


 

.