This Article is From Aug 21, 2019

ஓடி ஒளிவதால் பிரயோஜனம் கிடையாது- ப.சிதம்பரத்துக்கு அட்வைஸ் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்தித்து எப்படியாவது முன் ஜாமீன் வாங்கிடவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது ப.சிதம்பரம் தரப்பு

ஓடி ஒளிவதால் பிரயோஜனம் கிடையாது- ப.சிதம்பரத்துக்கு அட்வைஸ் கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

தெற்கு டெல்லியில் இருக்கும் ஜோர் பாக் பகுதியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு 6 சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் சிதம்பரம் (P Chidambaram). அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டி வருகிறார் சிதம்பரம். 

ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ-யும் அமலாக்கத் துறையும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதிமுக தரப்பு இந்த விவகாரம் குறித்து எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், “ப.சிதம்பரம் ஓடி ஒளிவதால் எந்த பிரயோஜனமும் இல்லை” என்று கூறி அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அவர் மேலும் இது குறித்து பேசுகையில், “ஐ.என்.எக்ஸ் வழக்கில் நீதிமன்றம், ப.சிதம்பரத்துக்கு எதிராக மிகக் கடுமையான கருத்துகளை சொல்லித்தான் ஜாமீனை ரத்து செய்துள்ளது. எந்த வழக்காக இருந்தாலும் அதை சந்தித்துதான் ஆக வேண்டும். அதேபோலத்தான் இந்த வழக்கும். ப.சிதம்பரம் ஓடி ஒளிவதில் எந்தப் பயனும் இருக்காது. அவர் வழக்கை நேரடியாக சந்திப்பதுதான் சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்தித்து எப்படியாவது முன் ஜாமீன் வாங்கிடவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது ப.சிதம்பரம் தரப்பு. ஆனால், இன்று அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. 

தெற்கு டெல்லியில் இருக்கும் ஜோர் பாக் பகுதியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு 6 சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றுள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று நள்ளிரவு சிபிஐ தரப்பில், சிதம்பரம் வீட்டில் இது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
 

.