This Article is From Feb 15, 2019

காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்! - ரஜினிகாந்த் கடும் கண்டனம்

காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இது என காஷ்மீர் தாக்குதல் சம்பவத்திற்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்! - ரஜினிகாந்த் கடும் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறையில் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் மீண்டும் பணிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு கார் ஒன்று துணை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்துகளில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதியது. இதில், அந்த பேருந்து முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ வீரர்கள் 44 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் இரு தமிழக வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவசந்திரன் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து கூறியதாவது, காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத வன்முறை சம்பவத்திற்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இதுபோன்ற காட்டுமிராண்டித்தன செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் நெருங்கி உள்ளது. உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். வீரம் நிறைந்தவர்கள் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் என தெரிவித்து உள்ளார்.

.