This Article is From Jul 19, 2019

தமிழகத்தில் டிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: அரசு உறுதி

தமிழர்களுடைய கலாசாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என்று அந்நிறுவனம் சொன்னதினால் தடை நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் டிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: அரசு உறுதி

கடந்த வருடமே டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.


தமிழகத்தில் டிக் டாக் செயலி உறுதியாக தடைசெய்யப்படும் என்று பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.

நாள்தோறும் டிக் டாக் செயலியால் பல்வேறு விபத்துகளும், குற்ற சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக பெண்கள் இதனால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இதனால் கடந்த வருடமே டிக் டாக் செயலி இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.

எனினும் தவறான வீடியோக்கள், ஆபாசமான வீடியோக்கள் செயலியில் இடம்பெறாது என்று கூறி அனுமதி வாங்கி மீண்டும் வந்தது டிக்டாக் செயலி. 

இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு, பதில் அளித்த தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது, ”ஒரு செயலியை நீக்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது தொடர்பான குழு டெல்லியில் உள்ளது. அந்த அமைப்பின் மூலமாக தான் செயலியை நீக்க முடியும்.  

தமிழ்நாட்டிற்கு நோடல் அதிகாரியை நியமித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு செயலியை விலக்குவது, நீக்குவது என்றால் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி, பின்னர்தான் அவர்கள் நீக்கம் செய்வார்கள்.

கடந்த பிப்.11ஆம் தேதி மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. அதுதொடர்பான வழக்கில் சில நிபந்தனைகளை அளித்தது நீதிமன்றம். தமிழர்களுடைய கலாசாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என்று அந்நிறுவனம் சொன்னதினால் தடை நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

செய்தித்தாள்களில் தொடர்ந்து பலர் இறந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தவறான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வருகின்றன. மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 
 

.