செப்ஃ.11ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து இந்த யாத்திரையை விவசாயிகள் தொடங்கினர். (ANI)
New Delhi: விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை அவர்கள் டெல்லி - காஸிப்பூர் எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24ல் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்க வேண்டும், விவசாயிகளின் அனைத்து கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு நிலுவை தொகையை 14 நாட்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும், ஏற்கனவே விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் சஹரன்பூரிலிருந்து இருந்து கடந்த செப்.11ஆம் தேதி முதல் விவசாயிகள் ராஷ்டிரிய கிஷான் யூனியன் இந்த பேரணியை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து, வேளாண்துறை அமைச்சகம் மற்றும் பாரத் கிசான் யூனியனுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றதை தொடர்ந்து, நொய்டாவில் இருந்து மீண்டும் பேரணியை தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கூறும்போது, எந்த அரசியல்வாதியும் எங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதில்லை. எங்கள் கோரிக்கைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், டெல்லி-உத்தரப்பிரதேச எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, எல்லாவற்றையும் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துள்ளோம். நீங்களே பார்க்க முடியும். அவர்கள் இங்கு வந்ததும், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடுத்துசவோம், பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம், என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பேரணியை முடித்தும் தங்களது கோரிக்கைகள் ஏற்கபடாவிட்டால், அடுத்து உண்ணாவிரதம் இருக்கவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
With inputs from ANI