"ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, பாஜக தலைமையிலான ஆட்சி பல்வேறு நாசகர திட்டங்களைக் கொண்டு வர முயன்றது"
Thirumavalavan on CAA - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆளும் அதிமுக அரசு பற்றி நொந்துகொண்டு கருத்து ஒன்றைக் கூறியுள்ளார்.
“ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது, பாஜக தலைமையிலான ஆட்சி பல்வேறு நாசகர திட்டங்களைக் கொண்டு வர முயன்றது. அதில் பல திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று உறுதிபட கர்ஜித்தவர் ஜெயலலிதா. மத்திய அரசு, அவரின் எதிர்ப்பு காரணமாகவே பல திட்டங்களைக் கொண்டு வர அஞ்சியது.
இன்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்து, அதிமுகவை வழிநடத்தியிருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்திருப்பார். இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்திலேயே இந்தச் சட்டத்தை தோல்வியடைய செய்திருப்பார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது,” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, குடியுரிமைச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தது. மேலும் அவர் சட்டத்திற்கு எழும் எதிர்ப்பு குறித்துப் பேசுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர். இந்த சட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வாழ்கின்ற எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பு இல்லை. அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி. பாதிப்பில்லை,” என்று கூறியுள்ளார்.