This Article is From May 20, 2019

“இனி மதிக்கப்படாது!”- தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதும், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விஷயங்களை முன் வைத்து தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வந்தனர்.

“இனி மதிக்கப்படாது!”- தேர்தல் ஆணையத்தை வறுத்தெடுத்த ராகுல் காந்தி

ராகுல் காந்தி ட்வீட்டிய ஒரு சில மணி நேரங்களில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரமும் தன் பங்குக்கு விமர்சனங்களை முன் வைத்தார்.

ஹைலைட்ஸ்

  • தேர்தல் ஆணையம் அடிபணிந்துள்ளதை அனைவரும் அறிவர்: ராகுல்
  • தேர்தல் ஆணையத்தின் மீது முன்னர் அனைவருக்கும் அச்சம் இருந்தது, ராகுல்
  • பாஜக-வுக்கு, தேர்தல் ஆணையம் துணை போவதாக பலர் குற்றம் சாட்டினர்
New Delhi:

ஏழு கட்டங்களாக நடந்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம், இந்த தேர்தலில் நடந்து கொண்ட விதம் பற்றி கறாராக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

“தேர்தல் பத்திரங்கள் முதல் ஈ.வி.எம் கோளாறுகள் வரை, தேர்தல் அட்டவணை, நமோ டிவி, மோடி ஆர்மி, கேதார்நாத்தில் டிராமா என ஒவ்வொரு விஷயத்திலும் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அவரது கேங் முன்பு பணிந்துவிட்டது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. தேர்தல் ஆணையம் என்பது அனைவரும் பார்த்து அச்சப்படும் வகையிலும் மதிப்பு மிக்கதாகவும் இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது” என்று ட்விட்டர் மூலம் பொங்கியுள்ளார் ராகுல் காந்தி.
 

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதும், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு விஷயங்களை முன் வைத்து தேர்தல் ஆணையத்தை விமர்சித்து வந்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, உள்ளிட்டவர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்கி வந்தனர். 

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினார்கள் என்று ஆதாரத்துடன் புகார் அளித்த போதும் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

ராகுல் காந்தி ட்வீட்டிய ஒரு சில மணி நேரங்களில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், ப.சிதம்பரமும் தன் பங்குக்கு விமர்சனங்களை முன் வைத்தார். “தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு ஒரேயொரு புகார்தான். அவர்கள், தங்களது பணியை செய்யவே இல்லை என்பதுதான் அது. தங்களின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்தை முழுவதுமாக அர்பணித்துவிட்டார்கள். வெட்கம்” என்று கொதித்துள்ளார். 

அதேபோல சந்திரபாபு நாயுடுவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்திருந்தார். 


 

.