This Article is From Jul 15, 2019

பாஜக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது விமர்சிக்கப்படுகிறது: தமிழிசை குற்றச்சாட்டு

தபால் துறை தேர்வு மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

பாஜக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது விமர்சிக்கப்படுகிறது: தமிழிசை குற்றச்சாட்டு

பாஜக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது விமர்சிக்கப்படுகிறது என அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது போன்ற தோற்றத்தை ஸ்டாலினும் அவர்களின் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும் பொய்யாக பிரசாரம் செய்கிறார்கள். அவர்கள் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை. எல்லாவற்றிலும் தமிழ் பெருமைப்படுத்தப்படுகிறது. 

ஏதோ மத்திய அரசு வேண்டுமென்றே தமிழை புறக்கணித்தது போன்று பேசும் இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது சில நடைமுறைகளை கண்டு கொள்ளவில்லை. அஞ்சல் துறை தேர்வு மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ரயில்வே துறையில் உள்ள வேலைக்கும் தமிழக வேலைவாய்ப்பில் இருந்தே எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே ஏதோ இந்தி திணிக்கப்படுகிறது. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பாஜக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அது விமர்சிக்கப்படுகிறது. அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஸ்டாலினாக இருக்கட்டும், கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருக்கட்டும், விடுதலை சிறுத்தைகளாக கட்டும், வைகோ ஆக இருக்கட்டும் தமிழக வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். எந்த திட்டம் வந்தாலும் அது பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது என்று அவர் வேதனை தெரிவித்தார். 
 

.