This Article is From Jun 25, 2019

டிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன்! - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..!

அமமுக. நிர்வாகி ஒருவரிடம், டிடிவி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன்! - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..!

டிடிவி தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தநிலையில், அமமுக. நிர்வாகி ஒருவரிடம், டிடிவி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்கதமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து தினகரனையும், சசிகலாவையும் நீக்கிய பிறகு, அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்கதமிழ்ச்செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் முக்கிய முடிவுகளில் தங்க தமிழ்ச்செல்வனின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தது.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து, அமமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், இத்தொகுதியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை அடைந்தார். இதையடுத்து, தங்கதமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவுக்கே செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நேற்று அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், டிடிவி தினகரன் உதவியாளரிடம், தங்கத் தமிழ்ச்செல்வன் பேசுகிறார். அதில், 'இந்த மாதிரி ஒரு பொட்டத்தனமான அரசியல் செய்றத நிப்பாட்ட சொல்லுப்பா, உங்க அண்ணண'என்கிறார். நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்கமாட்டீர்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கிறார்.

இந்த ஒலிப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தங்கதமிழ்செல்வன் தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் கூறும்போதும், கட்சியை பற்றி நான் பேசியது உண்மை தான்; என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

.