This Article is From May 04, 2020

மே7-ம்தேதி முதல் டாஸ்மாக் செயல்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் செயல்படாது என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மே7-ம்தேதி முதல் டாஸ்மாக் செயல்படும்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளான Containment Zone களில் டாஸ்மாக் செயல்படாது.

ஹைலைட்ஸ்

  • மே 7-ம்தேதி முதல் மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்படும் என அரசு அறிவிப்பு
  • மதுக்கடைகள் திறக்க 6 விதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது
  • மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம்

மே 7-ம்தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் செயல்படாது என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

எனினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளான Containment Zone களில் டாஸ்மாக் செயல்படாது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் அண்டை மாநில மதுக்கடைகளுக்கு செல்வதால், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரமங்கள் உள்ளன. 

இவற்றை கவனத்தில் கொண்டு மே 7 முதல் மதுக்கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது. மதுக்கடைகளுக்கு கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

1. மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.

3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூட அனுமதியில்லை.

4. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.

5. அனைத்து மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

6. தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

.