This Article is From Jun 18, 2019

மக்களவையில் தமிழில் பேசி மிரளவிட்ட தமிழக எம்.பிக்கள்! - பதவியேற்பில் சுவாரஸ்யம்!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவி பிரமாணம் ஏற்று, ’தமிழ் வாழ்க’ என்று கோஷமிட்டு, மக்களவையே அதிர வைத்துள்ளனர்.

மக்களவையில் தமிழில் பேசி மிரளவிட்ட தமிழக எம்.பிக்கள்! - பதவியேற்பில் சுவாரஸ்யம்!

17-வது மக்களவையின் முதற்கூட்டம் நேற்று கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பல்வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும் நேற்று பதவியேற்றனர்.

தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் எம்.பிக்கள் பதவியேற்று வருகின்றனர். அந்தவகையில், தமிழக எம்.பிக்கள் இன்று தமிழிலேயே பதவியேற்று, மக்களவையை அதிர வைத்தனர்.

ஒவ்வொரு தமிழக எம்.பியும், பெரும்பாலும் தங்கள் பதவியேற்பு உரையின் இறுதியில், 'வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு' என முழக்கமிட்டனர். திமுக எம்.பிக்கள், பெரும்பாலானோர், கலைஞர் வாழ்க, தளபதி வாழ்க என்றும் கூறி பதவியேற்றனர். தமிழக காங்கிரஸ் எம்.பிக்களும் தமிழில் பதவியேற்று, ராஜிவ் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டனர்.

இவர்களில், அதிமுக எம்.பி. ரவிந்தரநாத் பதவியேற்கும் போது, 'வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்' எனக் கூறினார். அப்போது அவருக்கு ஆதரவாக பாஜக எம்.பிக்கள் பெரும்பாலானோர் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்ற போதும், தமிழ் வாழ்க என்று கோஷமிட்ட போதும், எதிரே அமர்ந்திருந்த பாஜக எம்.பிக்கள், 'பாரத் மாதாகி ஜே' என கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பதவியேற்ற போது, 'வாழ்க அம்பேத்கார், வாழ்க பெரியார், வெல்க ஜனநாயகம், வெல்க சமத்துவம்' என்று கூறினார்.

இதேபோல், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கனிமொழி குறிப்பிட்டபோதும், ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.

.