This Article is From May 16, 2019

‘அதிமுக சமுத்திரம், அமமுக டம்ளர் தண்ணீர்!’- ஜெயக்குமார் விமர்சனம்

"அதிமுக என்னும் சமுத்திரத்தில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டால், சமுத்திரம் வற்றிவிடுமா?"

‘அதிமுக சமுத்திரம், அமமுக டம்ளர் தண்ணீர்!’- ஜெயக்குமார் விமர்சனம்

"அமமுக-வில் இருப்பவர்கள் சீக்கிரமே அதிமுக என்னும் தாய் கழகத்துக்குத் திரும்புவார்கள்"

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுக ஒரு சமுத்திரம் போன்றது என்றும், அமமுக ஒரு டம்ளர் தண்ணீர்' என்று விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘அதிமுக என்னும் சமுத்திரத்தில் இருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொண்டால், சமுத்திரம் வற்றிவிடுமா. சமுத்திரம் எந்த காலத்திலும் வற்றாத ஒன்று.

அமமுக-வில் இருப்பவர்கள் சீக்கிரமே அதிமுக என்னும் தாய் கழகத்துக்குத் திரும்புவார்கள். காரணம், அவர்கள் உடம்பில் ஓடுவது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ரத்தம். அம்மா ஜெயலலிதா அவர்களின் ரத்தம். சூடு, சொரணையுள்ள எந்த அதிமுக தொண்டனும் மீண்டும் அதிமுக-வுக்குத் திரும்புவான்' என்று திட்டவட்டமாக கூறினார். 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த போது, “இப்போது நடந்து கொண்டிருப்பது அம்மா (ஜெயலலிதா) ஆட்சியே கிடையாது. அம்மா அவர்கள் உருவாக்கிய ஆட்சி. இது துரோகிகள் நடத்தும் ஆட்சி. இந்த ஆட்சியை கவிழ்த்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

திமுக-வில் உறுப்பினராக இருந்து, அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற பாடுபட்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், அதற்கு எதிராக அவர் அதிமுக என்ற கட்சியை தொடங்கவில்லையா. அவர், அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியதால், அண்ணாவுக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்ல முடியுமா. அப்படிப் பார்த்தால் 1988 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய ஆட்சியை ஜெயலலிதா கலைக்கவில்லையா? 

அதைப் போலத்தான் தற்போதைய ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது காலத்தின் கட்டாயம்” என்று பேசினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஜெயக்குமார், “தினகரன் பேசியதை சூடு, சொரணை, ரோஷமுள்ள எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக் கொள்ளமாட்டான். எம்.ஜி.ஆர் மீது பக்தி கொண்ட, அம்மா (ஜெயலலிதா) மீது பக்தி கொண்ட எந்தத் தொண்டனும் தினகரன் கருத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். 

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இன்று அம்மா மீதே குற்றம் சுமத்தும் அளவுக்கு வந்துவிட்டார் தினகரன். அம்மாவால், அவர் எம்.பி ஆக்கப்பட்டார். ஆனால் அதே அம்மாதான், நாட்டை விட்டே தினகரனை துரத்தினார். இன்று அம்மா இல்லாத தைரியத்தில் இப்படியெல்லாம் பேசி வருகிறார். இதுதான் அவரது சுயரூபம்” என்று கடுகடுத்தார்.
 

.