தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை தீவிரம் அடைந்திருக்கிறது.
Chennai: திமுக மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் பிரச்னைகள் சட்டசபையில் பேசப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வேலூரை தவிர்த்து மற்ற 38 தொகுதிகளில் நடத்தப்பட்டது. இதில் தேனியை தவிர்த்து மற்ற அனைத் இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மக்களவையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தமிழக பிரச்னையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
மக்களவையில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து எம்.பி.க்கள் பேசினர். காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை அதிமுக அரசு சரியாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டி, திமுக சார்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் புதிய முயற்சியாக மின்னஞ்சல் ஒன்றை திமுக ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அனுப்பப்படும் தமிழக பிரச்னைகளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் எழுப்புவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது-
குடிநீர் பஞ்சம் தொடங்கி வேலையில்லாத் திண்டாட்டம் வரை தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும் வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை திமுக உறுதி செய்யும். உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினை என நீங்கள் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். #VoiceofTN
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.