This Article is From Feb 18, 2020

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை!!

காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொடர்பாக முக்கிய முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை!!

அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொடர்பாக முக்கிய முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 


சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதுதொடர்பாக சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகள் படும் துயரத்தைக் கவனத்தில் கொண்டு இதை நான் அறிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு கொண்டு வராது.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு திமுகதான் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களைப் பற்றி திமுகவினர் பொய் பிரசாரங்களைச் செய்து வருகின்றனர். அவர்கள் என்னதான் பிரசாரம் செய்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.

நெடுவாசலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றனர். முதல்வர், அமைச்சர்களைப் பற்றிப்பேசி அவர்கள் ஆதாயம் பெற முயல்கின்றனர் என்று பேசியிருந்தார்.

இதனை விமர்சித்த எதிர்க்கட்சிகள், காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பது தொடர்பாகச் சிறப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையே, தமிழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில், முதல்வர் அறிவித்த சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

.