தென்மேற்கு பருவக்காற்றால் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையை தமிழகம் எதிர்கொண்டு வருகிறது. மழை இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருவதால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் ஓட்டல்கள், மால்கள், ஐ.டி.நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
வளிமண்டல மேலடுக்கு சூழற்சி, தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நெல்லை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.