‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது பணக்காரர்களுக்கு உவப்பானதாக இருக்கவில்லை' என்று சென்னையில் இன்று பேட்டியளித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் 8 ஆம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.
அப்போது அவர், ‘அடுத்த 50 நாட்களுக்குள் நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து விடும்' என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக பணமதிப்பிழப்பு பெரும் வெற்றி என்று சொல்லி வந்தாலும், எதிர்கட்சிகள் அந்த நடவடிக்கை கடுமையாக சாடி வருகின்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை பணத்தைப் பதுக்கி வைத்தவர்களுக்கு எதிராக எடுத்த நவடிக்கை. யாரும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. இந்த நடவடிக்கை பணக்காரர்களுக்கானது அல்ல' என்று கூறினார்.
அவரிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு, ‘எதிர்கட்சிகள் ஒன்றிணைவதால் மோடி தலைமையிலான ஆட்சி ஆட்டம் காணாது. அவருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது' என்று பதிலளித்தார்.