சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்த கணவன் மனைவிக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் விளைவு!
கோவையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், மது அருந்திவிட்டு தன்னை தாக்க முயன்ற தனது கணவரிடமிருந்து தப்ப முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் கணவரை கொன்றதாகவும். அதனால் அந்த பெண் எலி மருந்து அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் பாபுராஜ் (37) அவரது மனைவி பாக்கியம் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று மதியம் சுமார் 2 மணிக்கு பாக்கியத்தின் வீட்டுக்கு சென்ற பாபுராஜூக்கும் அவரது மனைவி பாக்கியத்திற்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது கையில் இருந்த மது பாட்டிலை பயன்படுத்தி பாக்கியத்தை தாக்க முயன்றார்.
அப்போது பயத்தில் பாக்கியம் அங்கிருந்த கட்டையை பயன்படுத்தி பாபுராஜை தாக்கினார், செய்த கொலையின் விளைவை அஞ்சி பாக்கியம் விஷத்தை அருந்த முயன்றதாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் தனது பெற்றோரை இப்படி கண்ட மகள் அருகில் வசித்தவர்களை அழைத்ததால் அவர்கள் பாபுராஜ் மற்றும் பாக்கியத்தையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு வரும் முன்னரே பாபுராஜ் இறந்து விட்ட நிலையில் பாக்கியம் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளார்.