This Article is From Sep 29, 2018

பாலியல் தொந்தரவு கொடுத்த பத்திரிகையாளர்..!?- ஃபேஸ்புக் லைவ் செய்த நடிகை!

42 வயதாகும் அந்த தமிழ் நடிகை, 8 நிமிடங்களுக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியுள்ளார். அந்த லைவ் வீடியோ வைரலாகி இருக்கிறது

பாலியல் தொந்தரவு கொடுத்த பத்திரிகையாளர்..!?- ஃபேஸ்புக் லைவ் செய்த நடிகை!

கடந்த சில ஆண்டுகளாக பத்தரிகையாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக நடிகை குற்றம் சாட்டியுள்ளார்

Chennai:

மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்று ஃபேஸ்புக் லைவ் மூலம் குற்றம் சாட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த நடிகை.

42 வயதாகும் அந்த தமிழ் நடிகை, 8 நிமிடங்களுக்கு ஃபேஸ்புக் லைவ் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியுள்ளார். அந்த லைவ் வீடியோ வைரலாகி இருக்கிறது.

வீடியோவில் அந்த நடிகை, ‘எனது கணவர் ஹாங்காங்கில் இறந்த பின்னர், பிரகாஷ் எம்.சுவாமி என்பவர் என்னை தொடர்பு கொண்டார். எனது மகன் பாஸ்போர்ட்டில் இருக்கும் சிக்கலை சரி செய்து தருவதாக அவர் கூறினார். இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், என்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றார். இதனால் அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டேன்.

ஆனால், போன் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார் சுவாமி. என்னைக் குறித்து அவதூறான செய்திகளை பரப்பிவிடுவதாக அவர் மிரட்டினார். என் கணவரை கொன்றது நான் தான் என்பது போல பல தவறான தகவல்களை அவர் பரப்பி வந்தார். அது குறித்து ஒரு செய்திக் கட்டுரையையும் ஒரு வார இதழில் அவர் வெளியிட வைத்தார்’ என்றவர்,

தொடர்ந்து, ‘உயர் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் அவர் இருக்கும் படங்களை பலருக்குக் காட்டுவார். தனக்கு நிறைய பேரைத் தெரியும் என்பது போல பலரிடம் அவர் சொல்லிக் கொண்டு, அவர்களை பயன்படுத்திக் கொள்வார்.

போலீஸிடம் இது குறித்து புகார் அளித்த போது, எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. சி.எஸ்.ஆர் தான் பதிவு செய்யப்பட்டது’ என்று கூறி வீடியோவில் சி.எஸ்.ஆர் நகலை காண்பித்தார்.

இது குறித்து பெண்கள் காவல் நிலையத்திடம் கேட்டபோது, ‘போன் மற்றும் இணையதளம் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சைபர் க்ரைம் துறையிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றது. சைபர் க்ரைம் துறையை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி நமது போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.

சுவாமி, அமெரிக்காவில் வசித்து வருகிறார். நடிகையின் குற்றச்சாட்டுகள் குறித்து அவர், ‘நடிகையின் மகன் பாஸ்போர்ட் குறித்த சிக்கலை சரி செய்து தருவதாக நான் கூறினேன். ஆனால், அவர் வீட்டுக்கு நான் சென்றதில்லை’ என்று கூறியுள்ளார்.

 

.