This Article is From Apr 10, 2019

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்குப் பின்னடைவு; உச்ச நீதிமன்றம் அதிரடி!

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மறு விசாரணை செய்யப்படலாமா என்பது குறித்தான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம், மத்திய அரசுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது.

New Delhi:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மறு விசாரணை செய்யப்படலாமா என்பது குறித்தான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம், மத்திய அரசுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அடுத்து, ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான பல ரகசிய ஆவணங்கள் கசிந்தன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் மீண்டும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், மத்திய அரசு தரப்பின் வாதங்களை மறுத்தது நீதிமன்றம். இதன் அர்த்தம், ரகசிய ஆவணங்கள் அடிப்படையில் மீண்டும் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யப்படலாம் என்பதுதான்.

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா மறும் அருண் ஷோரி ஆகியோர்தான், ரஃபேல் விவகாரத்தில் மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பூஷன், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வருகிறார். 

ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான ரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, மத்திய அரசு, ‘தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது' என்று கூறியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூஷன், ‘ஒரு உண்மையை பறைசாற்றும் வகையில் ஆவணம் இருந்தால், அது எப்படி பெறப்பட்டது என்பது முக்கியமல்ல' என்று பதில் வாதம் வைத்தார். 

ரஃபேல் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்டது குறித்து இந்து குழும தலைவர் என்.ராம், ‘பொது நலன் கருதிதான் நாங்கள் ஆவணங்களை வெளியிட்டோம். அது எங்கிருந்து எங்களுக்குக் கிடைத்தது என்பதை சொல்ல மாட்டோம்' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

முன்னதாக வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, ‘மத்திய அரசு, இந்த ஆவணங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று சொன்னாலும், ஆர்.டி.ஐ சட்டத்துக்குக் கீழ் அதில் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை' என்று கருத்து கூறியது. 

பொறுப்புத்துறப்பு: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து NDTV செய்தி வெளியிடுவதால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 10,000 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

.