தற்கொலைப்படை தீவிரவாதிகள் 9 பேர் கடந்த ஈஸ்டரில் தாக்குதல் நடத்தினர்.
Colombo: இலங்கையில் மதரசாக்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வலியுறுத்தியுள்ளார். தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து கட்டுப்பாடுகளை இலங்கை அரசு கடுமையாக்கி வருகிறது.
கடந்த ஏப்ரல் 21-ம்தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 9 இடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு குண்டுவெடிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மதரசாக்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்த தகவலை கல்வித்துறை அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் தெரிவித்ததாக டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும், கல்வித்துறை மதரசாக்களை ஒழுங்குமுறைப் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் காரியவாசம் கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கை மேற்கு பகுதியின் மேம்பாட்டுத்துறை அமைச்சர் படாலி சாம்பிகா ரணாவகா, இலங்கையில் சுமார் 800 மதகுருக்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதாகவும், அவர்கள் டூரிஸ்ட் விசாவில் இருப்பதால் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இலங்கையில் மொத்தமே 2.10 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் இந்துக்களுக்கு அடுத்தபடியாக 10 சதவீத முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கின்றனர். 7 சதவீத கிறிஸ்தவர்கள் இலங்கையில் உள்ளனர்.