This Article is From Nov 04, 2018

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த 1ஆம் தேதி தொடங்கியது முதல் தென்மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது,

மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

தென், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரையில் ஓரிரு முறை இடைவெளிவிட்டு லேசான மழை பெய்யும் என அவர் கூறினார்.

.