This Article is From Sep 23, 2019

Tihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு!

கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்திருந்தனர்.

Tihar Jail: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு!
New Delhi:

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த செப்.5ஆம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சிதம்பரத்தை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சிறைக்கு நேரில் சென்று சந்தித்தனர். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூத்த தலைவருக்கு தொடர்ந்து, ஆதரவளிப்பதை எதிர்க்கட்சி முடுக்கிவிட்டுள்ளது. கடந்த வாரம், காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்தனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், செப்.5 முதல் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் முடிவடைந்த நிலையில், டெல்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது சிறைக்காவலை அக்.3ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, ப.சிதம்பரம் இங்கு எனக்கு தலையணையோ அல்லது இருக்கையோ கொடுக்கப்படவில்லை. இதனால் முதுகு வலி வந்துவிட்டது.  “முன்னர் எனது அறைக்கு வெளியே இருக்கைகள் இருந்தன. அதில் நான் அமர்ந்திருப்பேன். தற்போது, அதுவும் நீக்கப்பட்டுவிட்டன. நான் பயன்படுத்திய காரணத்திற்காகவே அந்த இருக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. தற்போது சிறை வார்டன் கூட இருக்கை இல்லாமல்தான் உள்ளார்” என்று வழக்கு விசாரணையின்போது  தெரிவித்தார்.

இதற்கு அரசுத் தரப்பு, “இது ஒரு சிறிய விஷயம். அறைக்குள் எந்த இருக்கையும் இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்” என்று எதிர் வாதம் வைத்தது. 

முன்னதாக, கடந்த 2007 ஆம் ஆண்டு ப.சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா என்பது பீட்டர் மற்றும் இந்திரானி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம். இந்த இருவரும் மகள் ஷீனாபோரா கொலை வழக்கில் சிறையில் உள்ளார்கள். இந்த இருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, சிறையில் இருந்தபடியே ப.சிதம்பரம், தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

.