This Article is From Jan 24, 2020

சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக கையெழுத்து இயக்கம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பிப்.2 முதல் 8ம் தேதி வரை குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம்.

சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக கையெழுத்து இயக்கம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கையெழுத்து இயக்கத்துக்கு பின், மக்கள் பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளோம் - மு.க.ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.  

இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பிப்.2 முதல் 8ம் தேதி வரை குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறினார். 

மேலும், கையெழுத்து இயக்கத்துக்கு பின், மக்கள் பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் நேரம் கிடைத்தால் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் பற்றி வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

.