This Article is From Nov 13, 2019

Maharashtra-வில் யார் ஆட்சி..? Thackeray - Congress இடையில் நள்ளிரவில் ஆலோசனை - என்ன நடந்தது?

வரலாற்றில் முதன்முறையாக எதிர் துருவ கொள்கைகள் கொண்ட சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Maharashtra-வில் யார் ஆட்சி..? Thackeray - Congress இடையில் நள்ளிரவில் ஆலோசனை - என்ன நடந்தது?

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி, ஆதரவு கோரினார்

Mumbai:

மகாராஷ்டிராவில் (Maharashtra) குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) அமலாகியுள்ள நிலையில், சிவசேனாவின் (Shiv Sena) தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackaray) மற்றும் மாநில காங்கிரஸ் மூத்த நிர்வாகி, அகமது படேல் ஆகியோர், ஆட்சியமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன. தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவைக் கோரியது.

வரலாற்றில் முதன்முறையாக எதிர் துருவ கொள்கைகள் கொண்ட சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் நீட்சியாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி, ஆதரவு கோரினார். சோனியாவோ, நான் கட்சி பிரமுகர்களுடன் கலந்தோலிசித்து விட்டு மீண்டும் அழைக்கிறேன் என்று முடித்துக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னர், ‘சிவசேனாவுக்கு ஆதரவு கிடையவே கிடையாது,' என்று உறுதியாக இருந்த சோனியா, ஒரு கட்டத்தில், ‘ஆதரவு கொடுக்கலாம்' என்ற நிலைப்பாட்டுக்கு வந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் மாநிலத்தில் தனது கூட்டாளியான தேசியவாத காங்கிரஸின் சரத் பவாரைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளார் சோனியா.

பவார், முதலில் இருந்தே சிவசேனா பக்கம் சாய தாயாராக இருந்தபோதும், ‘காங்கிரஸ் ஒப்புக் கொண்டால்தான் நாங்கள் வருவோம்' என்று கறார் காட்டினார். இப்படிபட்ட சூழலில் பவாருடன் பேசிய சோனியாவுக்கு குழப்பமான பதிலே கிடைத்தது. “சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தாலும், அவர்களுடன் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. பல விஷயங்களில் இன்னும் தெளிவு பெற வேண்டும்,” என்று சொல்லியிருக்கிறார். மேலும், “இந்துத்துவ வலதுசாரி சித்தாந்தம் கொண்ட சிவசேனாவுடன் காங்கிரஸ் செல்வது சரியாக இருக்குமா?,” என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

அனைத்தையும் கேட்டுக் கொண்ட சோனியாவும் காங்கிரஸும், சிவசேனாவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பது போல ஒரு பதிலைச் சொல்லிவிட்டது. இந்த பதிலைத் தொடர்ந்துதான், மாநிலத்தில் அரசியல் குழப்பம் மேலும் அதிகரித்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல் செய்யப்பட்டது. 

சிவசேனாவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் அகமது படேல், “காமன் மினிமம் புரோகிராம்-ஐ வகைபடுத்தாமல் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முடியாது,” என்று கூறியுள்ளார். தொடர்ந்து 3 கட்சிகளிடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 
 

.