This Article is From Dec 21, 2018

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Chennai:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆலை குறித்து ஆய்வு செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஆய்வு நடத்துமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலையை ஆய்வு செய்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஆலையை திறக்கலாம். ஆலையை மூடியது சரியல்ல எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் சமீபத்தில் அறிக்கை அளித்திருந்தது.

இதனையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று, விசாரணை முடிவடைந்ததை அடுத்து, சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், இரண்டு மாதத்தில் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது என்று தெரிவித்ததோடு, வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோல், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

.