This Article is From Apr 23, 2019

குண்டுவெடிப்புக்கு 2 மணி நேரம் முன்னதாகவே எச்சரித்த இந்தியா! - கோட்டைவிட்ட இலங்கை!!

மத்திய அரசு இலங்கைக்கு கடந்த ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் தீவிரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

குண்டுவெடிப்புக்கு 2 மணி நேரம் முன்னதாகவே எச்சரித்த இந்தியா! - கோட்டைவிட்ட இலங்கை!!

மத்திய உளவுத்துறையினர் இலங்கை தாக்குதலுக்கு 2 மணி நேரம் முன்னதாக இலங்கை உளவுத்துறையினரை தொடர்பு கொண்டிருந்தனர்.

Colombo:

இலங்கையில் 320 பேரை பலிகொண்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு 2 மணிநேரம் முன்னதாக இலங்கை உளவுத்துறையை மத்திய உளவுத்துறையினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இலங்கையில் 3 சர்ச்சுகள் மற்றும் 3 ஓட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தற்போது வரை 321 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த மாத தொடக்கத்தின்போது, நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்தியா தரப்பில் எச்சரிக்கை தகவல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனை இலங்கை பிரதமர் ரனில் விக்ரசிங்கேவும் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இதேபோன்று ஞாயிறன்று நடந்த தாக்குதலுக்கு 2 மணி நேரம் முன்பாக மத்திய உளவுத்துறை அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை இலங்கை பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 20 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை அரசும், மத்திய வெளியுறவு அமைச்சகமும் பதில் அளிக்கவில்லை.

.