This Article is From Nov 30, 2019

ஒவ்வொரு காவல் நிலையமாக அலைக்கழிக்கப்பட்டோம்: பெண் மருத்துவர் பெற்றோர்

Telangana Veterinarian Murder: பணி முடித்து வீடு திரும்பி வரும் வழியில் மாயமான கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொலை செய்யப்பட்டுள்ளார்.

Hyderabad Case: தெலுங்கானா கால்நடை மருத்துவரின் சகோதரி கடைசி உரையாற்றலை நினைவு கூறுகிறார்.

Hyderabad:

ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காணாமல் போன தனது மகள் குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்ற போது, ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டோம் என கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். 

கடந்த புதன்கிழமையன்று ஐதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் தனது பணியை முடித்து வீடு திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார். இதையடுத்து, நடந்த விசாரணையில், சம்பவம் நடந்த அன்று மாலை நேரத்தில் தனது வீட்டில் இருந்து அவசர பணி காரணமாக மருத்துவனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை மருத்துவர் தனது வாகனத்தை சுங்கச்சாவடி அருகே நிறுத்திவிட்டு கால்டாக்சியில் சென்றுள்ளார்.  

இதையடுத்து, பணியை முடித்து 9 மணி அளவில் திரும்பி வந்த அவர், தனது இருசக்கர வாகனத்தை எடுத்தபோது, அது பஞ்சர் ஆகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 9.15 மணி அளவில் தனது சகோதரிக்கு அந்த பெண் மருத்துவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாகவும், அதனை சிலர் பஞ்சர் பார்த்து தருவதாக கூறி எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனினும், அங்கு சில லாரி ஒட்டுநர்கள் அநாகரிமான முறையில் பார்த்து வருவதாகவும் இதனால், தனக்கு பயமாக இருப்பதாகவும் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில நிமிடங்களிலேயே அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. 

இதுதொடர்பாக என்டிடிக்கு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது, அவரது போன் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆனதாக தான் நினைத்தோம். இதையடுத்து, சுங்கச்சாவடி அருகே அவரை தேடி பார்த்தோம், அவர் கிடைக்காததால், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றோம். ஆனால், போலீசாரால் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு காவல் நிலையமாக மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டோம்.  

முதலில் RGIA நகர்ப்புற காவல் நிலையத்தில் இருந்து கிராமப்புற காவல் நிலையத்திற்கும், பின்னர் அங்கிருந்து மீண்டும் நகர்ப்புற காவல் நிலையத்திற்கும் மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்பட்டோம், சம்பவப் பகுதி யாருடைய அதிகார வரம்பில் வரும் என்பதில் காவல்துறையினர் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து, நள்ளிரவு 3 மணி அளவில், 2 காவலர்கள் உதவியுடன் நாங்கள் எனது மகளை தேடத்தொடங்கினோம் என்றார். தொடர்ந்து, சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததற்கு பதிலாக உடனடியாக நேரடியாக சென்று தேடுதல் முயற்சியில் விரைவாக ஈடுபட்டிருந்தால் என் மகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அவர் வேதனை தெரிவித்தார். 

இதையடுத்து, மறுநாள் காலை அந்த பெண் மருத்துவரின் உடைகள், கைப்பை, செருப்பு, மற்றும் ஒரு மதுபாட்டில் உள்ளிட்டவை அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திச்சென்ற அந்த சுங்கச்சாவடி அருகே கிடைத்துள்ளன. 

பின்னர், சுங்கச்சாவடியில் இருந்த 30 கி.மீ தூரத்தில் அந்த பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அது அவரது சடலம் தான் என்பதை அவரது குடும்பத்தினர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த விநாயகர் டாலரை வைத்து கண்டுபிடுத்துள்ளனர். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்து உடலை போலீசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதனிடையே, அந்த பெண்ணின் இருசக்கர வாகனம் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதற்கு 10 கி.மீ தொலைவில் காணப்பட்டுள்ளது. அந்த பெண்ணை சிக்க வைப்பதற்காகவே திட்டமிட்டு இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

.