பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வதேரா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
- நீதிமன்றத்தின் அனுமதியின்றி வதேரா வெளிநாடு செல்லக்கூடாது
- டிசம்பர் 9-ம்தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவு
New Delhi: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, சிகிச்சைக்காக தன்னை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை ராபர்ட் வதேரா எதிர்கொண்டு வருகிறார். சட்டவிரோதமான முறையில் லண்டனின் பிரையன்சன் சதக்கத்தில் 1.90 மில்லியன் பவுண்டுக்கு அவர் சொத்துக்களை வாங்கினார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில், இன்று வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தொடரப்பட்ட மனுவில், மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி வதேரா தரப்பில் ஆஜராகினார். இந்த வழக்கை சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் விசாரித்தார்.
சிகிச்சை மற்றும், வர்த்தகம் தொடர்பாக ராபர்ட் வதேரா ஸ்பெயின் நாட்டிற்கு டிசம்பர் 9-ம்தேதி செல்லவிருப்பதாகவும், இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் துளசி வாதிட்டார். 2 வாரங்களுக்கு அவர் ஸ்பெயினில் இருப்பார் என்று வதேரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையீடு மனுவில் டிசம்பர் 9-ம்தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டிருக்கிறார். முன்னதாக இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்தின்போது, ராபர்ட் வதேராவை அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. அவர் அங்கு 6 வாரங்கள் இருந்தார். சிகிச்சைக்காக வதேரா இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இருப்பினும் அவர், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இங்கிலாந்துக்கு சென்றால் அவர் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து வதேராவுக்கு இங்கிலாந்து பயண அனுமதி மறுக்கப்பட்டது.
பணமோசடி வழக்கில் வதேராவுக்கு கடந்த ஏப்ரல் 1-ம்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம்.