This Article is From Oct 08, 2019

பிரபலங்கள் மீது தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் - கமல்ஹாசன்

பிரபலங்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததற்கு எதிராக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் சசி தரூர் ஆகியோர் சர்வாதிகார நாடு என கடுமையாக விமர்சித்திருந்தனர்.

பிரபலங்கள் மீது தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் - கமல்ஹாசன்

49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் - கமல்ஹாசன்

Chennai:

இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக, இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர். அந்த கடிதத்தில் அவர்கள் கூறியதாவது, 

எங்கள் அன்பான இந்திய நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை பார்க்கும்போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

‘ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாக சேர்ந்து அடித்து கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்' என்றும், ‘நகர நக்சல்கள்' என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் இருக்கிறது. அதனால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து, மூசாபர்பூர் நீதிபதி தலைமை நீதிபதி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள் 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுதொடர்பாக , மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பதிவில், இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீதான தேசவிரோத வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அதில், பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை விரும்புகிறார் என்பதை அவரது நாடாளுமன்ற அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இதனை அரசாங்கமும் சட்டமும் பின்பற்ற வேண்டாமா? எனது சகோதரர்கள் 49 பேர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். 

உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்துடனும், நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

.

.