This Article is From Sep 12, 2018

கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு நீர் திறப்பு காரணமில்லை: நீர் ஆணையம்

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது

கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு நீர் திறப்பு காரணமில்லை: நீர் ஆணையம்

கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்ததும் ஒரு காரணம் என்று அம்மாநில அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை நிராகரித்துள்ளது மத்திய நீர் ஆணைய அறிக்கை.

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. அந்த அணை வலுவாக இல்லை என்றும், நீர் கசிவு இருப்பதாகவும் கேரளா அவ்வப்போது வழக்குகளை போட்டு வருகிறது. ஆனால், இறுதியாக உச்ச நீதிமன்றம் அணை வலுவாக இருப்பதாகவும், 142 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. 1886 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும், திருவாங்கூர் மஹாராஜாவுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.

கேரளாவில் வெள்ளம் ஏற்பட முல்லைப் பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் குற்றம் சாட்டியது. முல்லைப் பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் நீர் அளவு அதிகரித்து, அந்த அணையையும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அம்மாநில அரசு கூறியது.

இதையடுத்து மத்திய நீர் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. விசாரணை முடிவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘இடுக்கி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால் வெள்ளம் அதிகரித்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.