This Article is From Nov 22, 2019

OBC பிரிவினருக்கு மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு நிராகரிப்பு: ஸ்டாலின் கண்டனம்

பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை’ நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும்.

OBC பிரிவினருக்கு மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு நிராகரிப்பு: ஸ்டாலின் கண்டனம்

இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே!

பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை' நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்கு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ, அல்லது பிரதமர் அவர்களோ நாடாளுமன்றத்தில் உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

2017-18ம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி ஆகிய மருத்துவ இடங்கள் ‘மண்டல் கமிஷன்' அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ வெறும் 260 சீட்டுக்கள்!

2018-19ம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ 299 இடங்கள் மட்டுமே!

இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி மருத்துவ இடங்கள், இடஒதுக்கீடு கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், இப்போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை' நிராகரிப்பது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும்.

ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ‘நீட்' தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு - இப்போது அரசியல் சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் - மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன?

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து ‘இடஒதுக்கீடு' விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

.