தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ‘எந்த நேரத்திலும் இடைத் தேர்தலை சந்திக்கத் தயார்' என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி, ‘அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களுக்கும், எதிராக செயல்பட்டவர்களுக்கும் சரியான பாடத்தை உயர் நீதிமன்ற தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையம், எப்போது காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தினாலும, அதற்கு அதிமுக தயாராக இருக்கும். அனைத்துத் தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது' என்றவரிடம் செய்தியாளர்கள், தினகரன் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘அவர் என்ன மாபெரும் மனிதரா? அவருக்கு ஊடகங்கள் தான் தேவையில்லாத கவனத்தைக் கொடுத்து வருகின்றன. அவர் அதிமுக-வின் அடிப்பை உறுப்பினர் கூட இல்லை. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அவர் எங்கே இருந்தார். ஜெயலலிதாவாலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 18 எம்.எல்.ஏ-க்களின் வாழ்க்கையை அவர் காலி செய்துவிட்டார்' என்று கொதிப்புடன் பதில் தெரிவித்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)