This Article is From Jan 22, 2020

“திராவிடர் ரஜினிக்கு நன்றி..!”- திமுக எம்பி-யின் வைரல் ட்வீட்

Rajinikanth Periyar Row: ‘ரஜினி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் ஏன் அப்போது வெளிவந்த துக்ளக் இதழை ஆதாரமாக காட்டவில்லை’ என்று கேள்வி எழுப்பப்பட்டது

“திராவிடர் ரஜினிக்கு நன்றி..!”- திமுக எம்பி-யின் வைரல் ட்வீட்

Rajinikanth Periyar Row: தொடர்ந்து கனன்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்னை குறித்து எம்பி செந்தில் குமார், பதிவிட்ட ஒரு ட்வீட் வைரலாகியுள்ளது.

Rajinikanth Periyar Row: துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அது குறித்து விளக்கம் அளித்தார் ரஜினி. இந்நிலையில் ரஜினிக்கு திமுகவின் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நேற்று ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

இந்த மொத்த சம்பத்தில் திராவிட இயக்கத்தினர், ‘ரஜினி சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் ஏன் அப்போது வெளிவந்த துக்ளக் இதழை ஆதாரமாக காட்டவில்லை' என்று கேள்வி  எழுப்பினர். தொடர்ந்து கனன்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்னை குறித்து எம்பி செந்தில் குமார், பதிவிட்ட ஒரு ட்வீட் வைரலாகியுள்ளது.

அவர், “தமிழகத்தில் பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,” என்று கேலியாக பதிவிட்டுள்ளார். 

.