This Article is From Jan 21, 2020

“நண்பர் ரஜினி…”- பெரியார் குறித்த சர்ச்சை; சூப்பர்ஸ்டாருக்கு அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்!

Rajini Periyar Row: "“நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல. அவர் ஒரு நடிகர்"

“நண்பர் ரஜினி…”- பெரியார் குறித்த சர்ச்சை; சூப்பர்ஸ்டாருக்கு அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்!

Rajini Periyar Row: "அவருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுதான்..."

Rajini Periyar Row: துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை முன்வைத்தார். ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை, அவர் வரலாற்றைத் திரித்துச் சொல்கிறார் என்றும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ரஜினி. இந்நிலையில் இன்று திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம், சென்னையில் இருக்கும் அண்ணா அறிவாலயத்தில் கூடியது. கூட்டத்திற்குக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. செயற்குழுக் கூட்டம் நிறைவு பெற்ற பிறகு, அது குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கிப் பேசினார் ஸ்டாலின். அப்போது ரஜினி - பெரியார் விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிக்கு அறிவுரை வழங்கும் வகையில் பதில் அளித்துள்ளார் ஸ்டாலின். 

முன்னதாக துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. 

ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது. அப்போது ஆட்சியிலிருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இந்த செயலால் அரண்டுபோனது. துக்ளக் இதழின் பிரதிகளை மாநில அரசு பறிமுதல் செய்தது. அப்படி இருந்தும் மீண்டும் இதழ்களை அச்சடித்து விநியோகம் செய்தார் சோ. அது மிக அதிகமாக விற்றது,” என்று சர்ச்சையாக பேசினார். 

ரஜினியின் இந்தப் பேச்சுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இன்று சென்னையில் இருக்கும், தனது போயஸ் தோட்டம் இலத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இப்படி மீண்டும் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து ஸ்டாலின், “நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல. அவர் ஒரு நடிகர். அவருக்கு என் தாழ்மையான வேண்டுகோள் ஒன்றுதான். தமிழ் இனத்துக்காக 95 ஆண்டு காலம் உழைத்தவர் தந்தை பெரியார். அவர் குறித்து பொதுவெளியில் பேசும்போது மிகவும் யோசித்து, சிந்தித்துப் பேச வேண்டும்,” என்று மட்டும் அட்வைஸ் கொடுத்துள்ளார். 


 

.