This Article is From Mar 25, 2019

நடிகை குறித்த ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை குறித்த ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது! - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாராவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நடிகர் ராதாரவியின் இந்த கருத்துக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி சமூகவலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ராதாரவியின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நடிகர் ராதாரவி கழகக் கட்டுபாட்டை மீறியும் கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல், நடிகை நயன்தாரா குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ராதாரவி, என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

.