This Article is From Mar 02, 2019

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்: தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் கட்சி போட்டியிட உள்ளது.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்: தொகுதி உடன்படிக்கை கையெழுத்தானது!

புதிய தமிழகம், 1 நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • புதிய தமிழகத்துக்கு கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
  • அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே பாஜக, பாமக உள்ளன
  • பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து புதிய தமிழகம் கட்சி போட்டியிட உள்ளது. அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று கூட்டணி தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வரும் மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம், 1 நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்துக்கு கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். அங்கு அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் காத்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் கூட்டணி பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டு, உடன்படிக்கை தயாரானது.

அந்த உடன்படிக்கையை ஓ.பி.எஸ். செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்தார். ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. அதன்படி, புதிய தமிழகத்துக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து நடக்கவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் ஆதரவு கொடுக்கும்' என்று தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, ‘நாங்கள் தனி சின்னத்திலேயே இந்த முறையும் போட்டியிடுவோம். அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதில் சில நடைமுறைச் சிக்கல் இருப்பதால் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுக, ஆதரவு இருப்பதால் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது. எங்களுக்கு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் பலம் சேர்க்கின்றன. வரும் தேர்தலில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி கைப்பற்றும்' என்று கூறினார். 

.