This Article is From Apr 03, 2019

‘முழுக்க முழுக்க பொய்!’- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி பிரதமர் மோடி

வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி, அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க உள்ளன.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமாக 2 லோக்சபா சீட்டும், 57 சட்டசபை சீட்டும் இருக்கின்றன. 

Pasighat, Arunachal Pradesh:

காங்கிரஸ், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இது குறித்து இன்று அருணாச்சல பிரதேசத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க பொய்களால் நிரம்பியுள்ளன' என்று கறாராக விமர்சனம் செய்தார். 

நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அறிக்கையின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கான குறைந்தபட்ச ஊதியத் திட்டம், விவசாய பட்ஜெட், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு விலக்கு, மீனவர் நலனுக்குத் தனி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘அவர்களுக்கு என்ன ஆயிற்று (காந்தி குடும்பத்தை நேரடியாக குறிப்பிடாமல்). ஒரு பக்கம் இந்த சவுகிதார், நாட்டைக் காப்பாற்றப் பார்க்கிறேன். இன்னொரு பக்கம் காங்கிரஸ், தரம் தாழ்ந்த வகையில் நடந்து கொள்கிறது. காங்கிரஸ் கை கோர்த்துள்ளது, குடிமக்களுடனா அல்லது தேசவிரோதிகளுடனா?' எனக் கேள்வி எழுப்பினார். 

அவர் தொடர்ந்து, ‘2019 நாடாளுமன்றத் தேர்தல் என்பது, உண்மைக்கும் பொய்க்கும் இடையிலானது. செயலாற்றுபவர்களுக்கும் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கும் இடையிலானது. நம்பிக்கையானவர்களுக்கும் ஊழல் கறை படிந்தவர்களுக்கும் இடையிலானது. காங்கிரஸ், எப்போதும் வட கிழக்கு மாநிலங்களை கவனிப்பதில்லை. தங்களது தேர்தல் அறிக்கையிலும் வட கிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் சேர்க்கவில்லை' என்று பேசினார். 

வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி, அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க உள்ளன. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமாக 2 லோக்சபா சீட்டும், 57 சட்டசபை சீட்டும் இருக்கின்றன. 

மேலும் படிக்க''70 ஆண்டுகளில் செய்யாத வேலையை 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எப்படி செய்யும்?'' - மோடி கேள்வி

.