This Article is From Nov 12, 2019

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி; உச்ச நீதிமன்றம் செல்கிறது சிவசேனா!!

Maharashtra President's Rule: பாஜகவும், சிவசேனாவும் ஆட்சி அமைக்க போதிய பலம் இருப்பதை நிரூபிக்க தவறிய நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மூன்றாவது பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முடிவில் தீவிரமாக உள்ளது சிவசேனா

Mumbai:

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மாநிலத்தில் அதிக இடங்களைப் பிடித்த பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும், அதற்குள் மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து, அது அமலுக்கு வந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக, நேற்றைய தினம் சிவசேனாவுக்கு ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அக்கட்சியால் ஆட்சி அமைப்பதற்கு தங்களுக்கு போதிய பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்க முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பலம் இருப்பதை நிரூபிக்க தங்களுக்கு மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஒருநாள் முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மேலும் சரத்பவாருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனிடையே, சரத்பவாருடன் தொலைபேசியில் உரையாற்றி சோனியா காந்தி, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

காங்கிரஸ் இன்று காலை அதன் முக்கிய தலைவர்களை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்திருந்தது, பின்னர், சரத்பவாரை டெல்லி வந்து சோனியா காந்தியுடன் ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, கட்சி எம்எல்ஏக்களுடனான சந்திப்பை காரணம் காட்டி சரத்பவார் சோனியாவுடனான சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின்னர் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், அக்கட்சியின் தலைவர் சோனியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. கருத்தியல் ரீதியாக வேறுபட்ட கட்சி, பாரம்பரிய எதிரி கட்சி, மகாராஷ்டிராவின் பல பகுதியில் தேர்தல்களில் நேரடி போட்டியில் இருந்த ஒரு கட்சியுடன் திடீரென பிணைப்பு கொள்வது குறித்து காங்கிரஸ் மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. 

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றும் வகையில், மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துள்ளது. 

.