This Article is From Jul 19, 2019

“என்னது 5 டிரில்லியன் பொருளாதாரமா..?”- மத்திய அரசை சீண்டும் பிரணாப் முகர்ஜி

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்ததை அடுத்து, திட்ட கமிஷனைக் கலைக்கப்பட்டது.

“என்னது 5 டிரில்லியன் பொருளாதாரமா..?”- மத்திய அரசை சீண்டும் பிரணாப் முகர்ஜி

1980-கள் முதல் பிரணாப் பலமுறை, மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • இந்திய பொருளாதாரத்துக்கு முன்னாள் அரசுகளும் காரணம்: பிரணாப்
  • காங்கிரஸ் பொருளாதாரத்தை 1.8 டிரில்லியன் டாலர் கொண்டு வந்தது: பிரணாப்
  • பாஜக அரசு திட்ட கமிஷனை கலைத்ததையும் விமர்சித்துள்ளார் பிரணாப்
New Delhi:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, யாரும் எதிர்பாராத வகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது கறாரான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு, ‘இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக உருவெடுக்கும்' என்றது. அதற்கு பிரணாப், “5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் உயர உள்ளது, தற்போது மத்தியில் அமைந்துள்ள அரசின் சாதனையாக மட்டும் பார்க்க முடியாது. இதற்கு முன்னர் அமைந்த அரசுகளும், அவர்களின் பங்கைச் செலுத்தினார்கள்” என்று பேசியுள்ளார். 

அவர் மேலும், “மத்திய நிதி அமைச்சர் நடப்பு நிதி ஆண்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்றார். இந்த மதிப்பு என்பது திடீரென்று சொர்கத்தில் இருந்து வந்துவிடவில்லை. இதற்கு முன்னர் போடப்பட்ட வலுவான கட்டுமானத்தால்தான் அது சாத்தியமாக உள்ளது. பிரிட்டிஷ் அரசு போட்ட கட்டுமானத்தால் அல்ல, சுதந்திரக்குப் பிறகு போடப்பட்ட கட்டுமானாத்தால்…” என்று கறாராக பேசியுள்ளார். 

“காங்கிரஸின் 55 ஆண்டு கால ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள், சுதந்திரத்தின்போது நாடு எங்கு இருந்தது, இப்போது எங்கு இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்குப் பலரும் தொண்டாற்றினர். நமது முன்னோடிகள், திட்டமிட்டப் பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆனால், இன்று இருப்பவர்கள் திட்ட கமிஷனையே கலைத்து விடுகிறார்கள்” என்று மேலும் தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்ததை அடுத்து, திட்ட கமிஷனைக் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாகத்தான் நிதி அயோக் அமைப்பைத் தொடங்கினார் மோடி. 

தன் வாழ்க்கையின் பெரும் பகுதியில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகியாக இருந்த வந்த பிரணாப், 2012 ஆம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1980-கள் முதல் பிரணாப் பலமுறை, மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டுள்ளார். 

.