This Article is From Jul 16, 2019

தபால் துறை தேர்வு ரத்து: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மீண்டும் தேர்வு!

கடந்த ஜூலை 14 தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னாள் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தபால் துறை தேர்வு ரத்து: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மீண்டும் தேர்வு!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மீண்டும் தேர்வு என ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு


ஜூலை 14-ல் நடந்த அஞ்சல் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் மீண்டும் தபால்துறை தேர்வுகள் நடைபெறும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 14 தேதி நாடு முழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகள் நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னாள் தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு இத்தேர்வு தமிழ் உட்பட 15 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்ட நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, ஆங்கிலம், இந்தியில் தேர்வு நடைபெறுவதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், தபால் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இன்று திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பிர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இவர்களுடன் அதிமுக எம்.பிக்களும் இணைந்து அமளியில் ஈடுபட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவை நான்கு முறை முடங்கியது. தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களும் அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, தமிழக எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். அப்போது, தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். 

மேலும், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தபால் துறை தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்படுகின்றன என்று அவர் அறிவித்தார். 


 

.