This Article is From Apr 20, 2019

’பொன்பரப்பி’ சம்பவங்கள் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்! - கமல்ஹாசன்

பொன்பரப்பி சம்பவங்கள் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

’பொன்பரப்பி’ சம்பவங்கள் தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்! - கமல்ஹாசன்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பியில் (ஏப்.18ல்) தேர்தல் தினத்தில், வாக்குப்பதிவு மையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் தேர்தல் சின்னமான பானையை ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மற்றொரு தரப்பினர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதனையடுத்து ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினர் வசித்துவந்த தெருவில் புகுந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதேபோல், அப்பகுதியில் வசித்து வந்தவர்களையும் அடித்து மண்டையை உடைத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் வலுத்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது,

'மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி.

சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி.' 

என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டிய அவர், மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல்.

இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என்று தெரிவித்துள்ளார்.

.