பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 4 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Pollachi: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து கல்லூரி படிப்பை தவிர்க்கும்படி அப்பகுதி பெண்கள் வற்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக என்.டி.டி.வி. நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டது.
கல்லூரி மாணவிகள் சிலர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
பொள்ளாச்சியை சேர்ந்த பெண்களை மணமுடிப்பதை தற்போது பலர் தவிர்த்து வருகின்றனர். குடும்ப கலாச்சாரத்திற்கு பொள்ளாச்சி பகுதி பெயர் பெற்றிருந்தது. ஆனால் அந்த சூழல் தற்போது மாறிவிட்டது.
தொலைதூர கல்வியை கற்கும்படி எங்களது பெற்றோர் வலியுறுத்துகின்றனர். நேரடியாக கல்லூரிக்கு செல்வதை தவிர்க்கும்படி கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயரை மாவட்ட காவல் துறையும், உள்துறை செயலரும் எப்படி வெளியிடலாம்?. இதன்பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் யாரைத்தான் நம்புவார்கள்.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி பகுதி ஆண்கள் சிலர் கூறும்போது, ‘'இந்த சூழல் எங்களுக்கு தற்போது மிகவும் சிக்கலான சூழல் ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல; எங்களது பெண்கள், நண்பர்களுக்கும் இது முக்கியமான காலகட்டம். அவர்களது பாதுகாப்பு, உரிமைகள் குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்'' என்றனர்.