பலரின் துயரத்தைப் போக்கும் என்று குடியுரிமை திருத்த மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
New Delhi: குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வரலாற்றில் முக்கியமான நாள் என்று கூறியுயுள்ளார்.
நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்கிறது.
மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ' இந்தியாவின் சகோதரத்துவத்தையும், இரக்க குணத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத் தகுந்த நாள் இது. குடியுரிமை திருத்த மசோதா 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு அளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது நீண்ட நாட்களாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் மக்களின் துன்பத்தை போக்கும்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
.
குடியுரிமை திருத்த மசோதா 2019, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து 2015-க்கு முன்னர் அச்சுறுத்தல் காரணமாக வந்த புத்த மதத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், ஜெய்னர்கள், பார்ஸிக்கள், சீக்கியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிறது.
இந்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலும் மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு 120 உறுப்பினர்களின் ஆதரவு போதும் என்பதால் மசோதா இன்று நிறைவேறியது. குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு பின்னர் இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.