This Article is From Aug 24, 2019

எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன்: பிரதமர் மோடி உருக்கம்!

நாட்டின் பொருளாதாரத்தையும், ராணுவத்தையும் பலப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் அருண் ஜெட்லி என பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கலில் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட்.9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

New Delhi:

எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என அருண் ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவருக்கு உயிர்க்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சமயத்தில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. 
 

5rcjnsv8

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 

இந்நிலையில், தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், அருண் ஜெட்லியின் மறைவு குறித்த செய்தி அறிந்த அவர், குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தங்களை பகிர்ந்துகொண்டார்.
 


மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியதாவது, அருண் ஜெட்லி மிகச் சிறந்த மனிதர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். அவருடைய மறைவின் மூலம் நான் எனது மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன். ஒவ்வொரு விவகாரத்திலும் அவருக்கு இருக்கும் தெளிவு பிரமிக்க வைக்கும். அவருடைய தலைசிறந்த வாழ்வின் மூலம் பல நல்ல தருணங்களை நம்மிடையே விட்டுச் செல்கிறார். நாம் அவரை நிச்சயம் இழக்கிறோம்.

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காக்க முன்னின்றவர். பொது வாழ்வில் எப்போதும் அக்கறை கொண்டவர். நாட்டின் பொருளாதாரத்தையும், ராணுவத்தையும் பலப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர். மக்களுக்கான எளிமையான திட்டங்களை ஏற்படுத்தியவர். அந்நிய நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தியவர். 

பாஜகவும், அருண் ஜெட்லியும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒருங்கிணைந்து செயல்பட்டவர், எப்போதும் பாஜக-வின் முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். 
 

.