திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது
ரஜினி மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று
சொல்வார்கள் என்றார்.
அத்துடன், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெரியார் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ரஜினிகாந்த் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்காவிட்டால் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார்.