This Article is From Oct 04, 2018

‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய அமெரிக்கா மறுப்பு'- குமுறும் பாகிஸ்தான்

நாம் கவனம் செலுத்தினால் இரு நாட்டுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட முடியாது’ என்று பதில்

‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய அமெரிக்கா மறுப்பு'- குமுறும் பாகிஸ்தான்

சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா - பாகிஸ்தான் நடக்கயிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது

Washington:

இந்தியா - பாகிஸ்தான் இடையில் வெகு நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் பதவியேற்ற அரசு, ‘இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்’ என்று தெரிவித்தது. இதற்கு இந்தியாவும் தலையசைத்தது. ஆனால், தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொண்டதை அடுத்து, பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்திய அரசு. இந்நிலையில் பாகிஸ்தான், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவின் உதவியைக் கேட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக குமுறியுள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது தான், இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று குரேஷி வேண்டுகோள் வைத்துள்ளார். அவரது வேண்டோகளை நிராகரித்துள்ளது அமெரிக்கா.

இது குறித்து குரேஷி, ‘இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஏன் நாங்கள் அமெரிக்காவின் உதவியை நாடுகிறோம். ஏனென்றால் நாங்களும் இந்தியாவும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியவில்லை என்பதால் தான். இரு நாட்டுக்கும் இடையில் எதுவும் பேசாமல் இருப்பது ஆரோக்கியமானது கிடையாது. அது தான், சரியானது என்று இந்தியா நினைத்தால், விளைவுகள் இன்னும் மோசமடையத்தான் செய்யும்’ என்று கூறினார்.

சமீபத்தில் ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில், 3 காவல் துறையினரை தீவிரவாதிகள் கடத்திக் கொன்றனர். அதேபோல தீவிரவாதி புர்ஹான் வாணிக்கு ஆதரவாக இருக்கும் நபர்களை விடுவிக்கப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த 2 விஷயங்களை சுட்டிக்காட்டி தான், பாகிஸ்தானுடன் நடத்தயிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா.

அப்போது, ‘தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செயல்பட முடியாது’ என்று இந்தியா சொன்னது. இந்த கருத்து குறித்து குரேஷி, ‘தீவிரவாத நடவடிக்கை என்பது பேச்சுவார்த்தையை திசைத் திருப்ப சிலரால் செய்யப்படுகிறது. அதற்கு நாம் கவனம் செலுத்தினால் இரு நாட்டுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட முடியாது’ என்று பதில் அளித்தார்.

.