This Article is From Aug 22, 2019

ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி!

INX Media Case Updates: P Chidambaram: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என ப.சிதம்பரம் கூறி வருகிறார்.

ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி!

P Chidambaram Case: 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க (INX Media Case)அனுமதி கோரும் சிபிஐ தரப்பு

New Delhi:

ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் தர மறுத்ததை தொடர்ந்து, நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று காலை ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். சுமார் மூன்று மணி நேரம் நடந்தது. 

இந்த விசாரணையை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் பிற்பகலில் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தினர். அப்போது ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என சிபிஐ கோரியுள்ளது.

இதனிடையே, ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்மன் அளிக்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஆஜரானார் எனவும் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் ப.சிதம்பரம் தரப்பு வாதாடியது. 

இருதரப்புக்கும் இடையே நடந்த காரசார விவாதத்தை தொடர்ந்து, நீதிபதிகள் வழக்கை அரை மணி நேரம் ஒத்திவைத்தனர். தொடர்ந்து, சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா, காவலில் வைக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில், ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, இன்று இரவு முதல் ப.சிதம்பரத்திடம் விசாரணை தொடங்குகிறது என சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை வரை அவரிடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. 

Aug 22, 2019 19:07 (IST)
ஐஎன்எக்ஸ் வழக்கு:  நீதிமன்றத்தில் இருந்து சிபிஐ அலுவலகம் அழைத்துச்செல்லப்பட்டார் ப.சிதம்பரம். 
Aug 22, 2019 18:48 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நாளை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன் சிதம்பரம் தரப்பு முறையீடு செய்துள்ளது.

Aug 22, 2019 18:46 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: தினமும் அரை மணி நேரம் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
Aug 22, 2019 18:44 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை வரும் 26ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
Aug 22, 2019 18:04 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை அவரது பேத்தி அதித்தியுடன் பேச அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. 
Aug 22, 2019 17:57 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரம் உள்ளது என சிபிஐ தரப்பு தெரிவித்தது. ஆதாரத்தை வைத்து என்ன செய்தீர்கள் என சிதம்பரம் தரப்பு கேள்வி 
Aug 22, 2019 17:55 (IST)
ஐஎன்எக்ஸ் வழக்கு: இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி சற்றுநேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறார். 

Aug 22, 2019 17:22 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: வெளிநாடுகளில் வங்கி கணக்கு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர், அதற்கு நான், இல்லை என்றேன். அப்படி என்றால், எனது மகனுக்கு வெளிநாடுகளில் வங்கி கணக்கு உள்ளதா என்றனர். நான் ஆம் என்றேன் என நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
Aug 22, 2019 17:08 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு:
ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? தீர்ப்பு அரைமணி நேரத்திற்கு ஒத்திவைப்பு!

Aug 22, 2019 17:07 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள வைப்பதற்கான கருவியல்ல காவலில் எடுத்து விசாரிக்கும் முறை என அபிஷேக் சிங்வி வாதம்.
Aug 22, 2019 17:03 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்காமல் அவரிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வர முடியாது என சிபிஐ தரப்பு வாதம்.
Aug 22, 2019 16:59 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன என சிபிஐ தரப்பு வாதம்.
Aug 22, 2019 16:58 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு: சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திற்கு தட்டி கழிப்பது எப்படி என்பது நன்கு தெரியும் என சிபிஐ தரப்பு வாதம்.
Aug 22, 2019 16:56 (IST)

ஐஎன்எக்ஸ் வழக்கு:  கேட்ட கேள்விகளையே சிதம்பரத்திடம் சிபிஐ மீண்டும் கேட்கின்றனர், அவரிடம் கேட்பதற்கு வேறு கேள்விகள் அவர்களிடம் இல்லை என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதம். 
.