This Article is From Mar 24, 2020

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்பு

மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு ஓராண்டு சிறை: முதல்வர் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை - நாராயணசாமி

ஹைலைட்ஸ்

  • அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அழிக்க வேண்டும்
  • ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்படும்.
  • தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும்

ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவைகள் மார்ச்.31ம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுபாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுபாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறியதாவது, 

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்கவில்லை. புதுச்சேரி மக்களுக்கு உயிரைப் பற்றிக் கவலையில்லை.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டை போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர். புதுச்சேரி அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை அளிக்கப்படும். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும். நாளை (மார்ச்-25) முதல் 28-ம் தேதி வரை மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும். ஆகவே, மக்கள் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். நாளை முதல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

.