This Article is From May 04, 2019

‘தாக்குதல் ஏவுகணையை செலுத்தியுள்ளது வட கொரியா!’- தென் கொரியா பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தத் தகவலின் உண்மை தன்மை பற்றி தென் கொரிய மற்றும் அமெரிக்க தரப்புகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

‘தாக்குதல் ஏவுகணையை செலுத்தியுள்ளது வட கொரியா!’- தென் கொரியா பரபரப்பு குற்றச்சாட்டு

கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையில், அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது

‘வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த தூரம் சென்று தாக்குல் நடத்தும் ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளது' என்று தென் கொரியா தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு உள்ளதாக தென் கொரியா கூறுகின்றது. 

இது குறுத்து தென் கொரிய தரப்பு, ‘காலை 9:06 மணிக்கு வடகொரியா, ஓன்சான் கடற்கரை நகரத்தில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு ஏவுகணையை செலுத்தி இருக்கிறது. இந்த ஏவுகணை 70 முதல் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது' என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது. 

இந்தத் தகவலின் உண்மை தன்மை பற்றி தென் கொரிய மற்றும் அமெரிக்க தரப்புகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக இப்படிப்பட்ட நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடைசியாக வட கொரியா இப்படி ஏவுகணையை செலுத்தியது, நவம்பர் 2017-ன் போது. 

சில நாட்களுக்கு முன்னர்தான் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் காங் கியூங்-வா, ‘வட கொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக தெளிவான, உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார். 

கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையில், அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. தங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் உடனடியாக தளர்த்தப்பட வேண்டும் என்று வடகொரியா, அமெரிக்காவுக்கு வைத்த கோரிக்கை ஏற்கபடாததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 

இந்த வார தொடக்கத்தில் கூட வட கொரியா துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சன் ஹுய், ‘எங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகள் தளர்த்தப்படவில்லை என்றால், அமெரிக்கா தேவையில்லாத விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

.